Friday, May 23, 2025

மினிமலிசம்...

 மினிமலிஸம் என்பதை அதிகபட்ச எளிமை அல்லது சிக்கனத்தின் உச்சநிலை என்று சொல்லலாம். இருப்பதைக் கொண்டு வாழ்வது மற்றும் நாம் வாங்கும் ஒரு பொருளை 100% அல்லது அதற்கு மேலும் பயன்படுத்துவது. வாகனங்களை, மின்சாதனங்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்துதல். அதிகமான/ஆடம்பர பொருட்களை விலக்கி, குறைந்த/அத்தியாவசியப் பொருட்களுடன் அளவாக அழகாக வாழ்வது மினிமலிசம்.


அதிக பொருட்களுக்கு அதிக இடம்தேவை. அதனால் பெரிய வீடு, அவற்றின் பராமரிப்பு, மொத்தத்தில் கூடுதல் செலவு . பண விரயம்.


ஒரு திரைப்படத்தில் நாயகன் சொல்லுவார்,"இந்த ரீஃபிலை ஊதி ஊதி இன்னும் ரெண்டு challanஐ ஃபில் பண்ணிடுவேன்"னு. அதுவும் ஒரு மினிமலிச கோட்பாடு.


நாம் உபயோகித்து தூக்கி எறியும் ஒவ்வொரு பற்பசை குழாயினுள்ளே இருக்கும் பற்பசையினை வைத்து ஒருவர் ஒரு வாரம் பல் துலக்கலாம். நாம் அதனை முழுமையாக பயன்படுத்துவது இல்லை.

அதுபோல ஹேர்பின், கைக்குட்டைகள், பேனாக்கள்,பென்சில்கள் போன்ற பல பொருட்களை நாம் முழுதாக பயன்படுத்துவதில்லை.


நம் முன்னோர்கள் பல சம்பிரதாயங்களை வைத்திருந்தார்கள் அவையெல்லாம் உற்று நோக்கினால் அது ஒரு மினிமலிஸ்டிக் வாழ்க்கையை நோக்கித்தான் செல்லும். பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமனின் வேட்டியில் தொட்டில் கட்டுவது அத்தை அல்லது பாட்டியின் புடவையில் மெத்தை தைத்துப் போடுவது என பல விஷயங்கள். Reuse methods. இப்போது ஒரு குழந்தை பிறந்தால் நாம் அதற்கு எல்லாமே புதிதாக வாங்க வேண்டும் என எண்ணுகிறோம். அவற்றை ஒரு வருடம் உபயோகித்து விட்டு ஓரம் கட்டி விடுகிறோம்.


கணவன் சாப்பிட்ட தட்டில் மனைவி உண்பதுகூட இதில் சேரும். எப்படியென்றால் உலகம் முழுவதும் இதை செய்தால்... (அந்நியன் ஃபார்முலா, அஞ்சு லட்சம் பேர் அஞ்சு பைசா திருடுனா)

எவ்வளவு தண்ணீர், எவ்வளவு சோப்பு மிச்சம்.. அடிக்க வராதீர்கள்..


சிறுவயதில் எனக்கு தெரிந்த ஒரு தாத்தா, தினமும் கிழிக்கும் நாள்காட்டியின் தாள்களை ஒரு கிளிப்பில் மாட்டி வைத்திருப்பார். கடைக்குச் செல்ல அதன் பின் புறத்தில் லிஸ்ட், கணக்குகளை எழுதுவார். கடைசியில் கோழி எச்சங்களை எடுக்கவும் அந்த தாள்களை பயன்படுத்துவார். அவர் எத்தனை மரங்களை காப்பாற்றியிருப்பார்.


இதுபோன்ற மினிமலிச வாழ்க்கையினால் என்னென்ன நன்மைகள் என்றால், சுற்றுப்புற சீர்கேடு குறையும். இயற்கை வளங்கள், புதுப்பிக்கத்தக்க வளங்கள் பாதுகாக்கப்படும். பண விரயம் குறைந்து மிச்சப்படும். சேமிப்பு அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும். கடன் தொல்லை இருக்காது. பிறர்க்கு உதவலாம். மன நிம்மதி கிடைக்கும்.


உடம்பைக் குறைக்க ஜிம்மில் சேர்ந்து பணம் கட்டி, ஒரு கிமீ தூரத்தில் இருக்கும் ஜிம்மிற்கு வண்டியில் சென்று சிறிது நேரம் நடப்பதற்கு, வீட்டிலிருந்து நடந்து சென்றால் எரிபொருள் செலவு மிச்சம். இரண்டு ரவுண்டாக நடந்தால், ஜிம் ஃபீஸும் மிச்சம்.


சிலசமயங்களில் நாம் நேரத்தை மிச்சம் பிடிக்க அதிக பணம் செலவு செய்கிறோம். ஆனால் மிச்சம் பிடித்த நேரத்தை என்ன செய்கிறோம்?

Monday, April 28, 2025

அருணாசலம் பிள்ளை????

 திருநெல்வேலி சதிவழக்கின் மறக்கப்பட்ட வீரநாயகர் சாவடி அருணாசலம் பிள்ளை துயரக் கதை

(27-04-1937 நினைவு நாள்)


2002 ம் ஆண்டு நான் செங்கோட்டை சென்றிருந்த  வேளையில் எனது அருமை நண்பர் கடையநல்லூர் ஓவிய ஆசிரியர் திரு. ஜெயராமன அவர்கள் தங்களை ஒரு முக்கியமான இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அந்த இடத்தில் தங்களது பாதம் கட்டாயம் படவேண்டும் என்றார். 


முதலில் நான்  வீரவாஞ்சி வசித்த இல்லத்துக்கு அழைத்துப் போவார் என்று எண்ணிய வேளையில் வீரவாஞ்சியுடன் ஆஷ் கொலை திட்டத்துக்கு உடன் சென்று தப்பித்து தலைமறைவானவரும்,  கல்கத்தா நேஷனல் கல்லூரியில் மருத்துவ படிப்பை படித்த அன்றைய காலத்து இளைஞர் சாவடி அருணாசலம் பிள்ளையின் இரண்டு கட்டுமாடி வீட்டின் முன்பு கொண்டு போய் நிறுத்தினார்.


ஜெயராமன் அவர்களை ஆச்சரியத்துடன் நோக்கினேன். வரலாற்று துயரநாயகரின் வாழ்ந்த இல்லத்தினை  தரிசிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த மாதிரி நாயகர்கள் எல்லாம் உங்கள் மூலமாகவே நிறைவேறுகிறது என்று மகிழ்ந்த நிலையில் சாவடி அருணாசலம் பிள்ளை வம்சாவளியினர் இன்முகத்துடன் எங்களை வரவேற்றனர்.


குளுமையாக இருந்த வீட்டின் முன்பு வாசலைக் கடந்து விஸ்தாரமான திண்ணையைத் தாண்டியதும் நடுவீட்டில் அமரவைத்த அந்த அறையில் ஆஷ் கொலைவழக்கில் சொல்லொண்ணா கொடுமையை அனுபவித்த சாவடி அருணாசலம்பிள்ளையின் படம் அலங்கரித்துக் கொண்டிருந்தது. 


அந்த துயரநாயகரின் படத்துக்கு அருகே மற்றொரு படம் இந்தியாவின் புகழ்பெற்ற தமிழகக் கணிதமேதை (இராமனுஜத்திற்கு பிறகு) எஸ்.எஸ். பிள்ளை அவர்களது படச் சட்டகமும் அந்த பிரதான அறையை அலங்கரித்துக் கொண்டிருந்தது. இவர் எப்படி என்று வம்சாவளியினரிடத்தில் கேட்ட வேளையில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற தகவல் கிடைத்தது. 


அந்த வீடு முக்கிய பிரமுகர் ஜமீன்காலத்து வீடு மாதிரி தோற்றமளித்தது. அந்த பரம்பரையினரும் குணத்தில் பண்பட்ட மேன்மை மிகு குடும்பமாக பரிமளித்தனர்.


சாவடி அருணாசலம்பிள்ளை செங்கோட்டையில் மிகக் குறிப்பிடத்தக்க நிலபுலமிக்க செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர். சொல்லப்போனால் செங்கோட்டை ஊரின் பாதி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிலபுலம் கொண்ட வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். 


பெரியவர் வ.உ.சி. மற்றும் சிவா சிறையில் அடைக்கப்பட்டு வ.உ.சி.க்கு சிறையில் அளிக்கப்படும் கொடுமையைத் தாங்காது பல இளைஞர்கள் கொதிநிலையின் உச்சிக்குச் சென்று கலெக்டர் ஆஷ் அவர்களை போட்டுத் தள்ள எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி தலைமையில் பாரத மாதா அசோசியேசன் குடையின் கீழ் இயங்கி வந்தனர். அந்தச் சங்கத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டவர்.


இந்த சாவடி அருணாசலம்பிள்ளை வீட்டின் முதல் மாடியில் பாரத மாதா இளைஞர்கள் சங்கம் சார்பாக கலெக்டர் ஆஷ் அவர்களை கொலை செய்ய எண்ணி 14.04.1911 அன்று சித்திரை கூட்டம் நடந்தது. 


அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரகசிய அறையை நான் பார்க்க விரும்பி அந்த குடும்ப வம்சாவளியினரிடத்தில் அனுமதி பெற்று மேல்மாடி சென்று என் காலடியை பதித்து என்னை அறியாமல் உணர்ச்சி மேலிட்டு தரை முழுதும் என் உடம்பு படிய விழுந்து அந்த இடத்தை வணங்கினேன். 


இந்த அறையில்தான் 14.04.1911 அன்று நடந்த ரகசிய கூட்டத்தில் சுதேசிய கப்பலை முடக்கியும், பெரியவர் வ.உ.சி.யின் துயரப்பாடுகளுக்கும் காரணமாக இருந்த கலெக்டர் ஆஷ் அவர்களை கொலை செய்ய பதினைந்து உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டம் மாலை 3.00 மணியிலிருந்து 7.00 மணி வரை நடந்தது. கூட்டத்தின் இறுதியாக ரத்தக் கையெழுத்திட்டு ஆஷினை கொலை செய்ய தீர்மானம் செய்தனர்.


மிகப்பெரிய செல்வந்தர் சாவடி சுப்பிரமணிய பிள்ளைக்கு பல காலம் கழித்து அருந்தவச் செல்வராக பிறந்த சாவடி அருணாசலபிள்ளை பள்ளிப் படிப்பு முடித்த கையோடு கல்கத்தா நேஷனல் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்து அங்கு கல்வி பயில சென்றவர். இதற்கிடையே பெரும் செல்வந்தர் மகளாகிய தங்கம்மாள் என்பவரை 29.08.1901ல் திருமணமும் செய்து கொண்டதோடு அருணாசலம் அவர்களது மனைவி முதல் கருவைச் சுமந்து கொண்டிருந்தார் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.


ஆஷ் கொலைக்கு திட்டமிட்ப்பட்டு, யார் கொலை செய்வதென திருவுளச்சீட்டு போட்டுப் பார்க்க, வாஞ்சிக்கு அந்த வாய்ப்பு கிட்டியது. ஆஷ் அவர்களது பயணத்திட்டங்களை ரகசியமாக கவனித்தனர். வாஞ்சிக்குத் துணையாக சாவடி அருணாசலம் பிள்ளை உடன் வருவதற்கு உறுதியளிக்க, அதனைத் தொடர்ந்து 13-06-1911 திட்டத்தை நிறைவேற்ற திருநெல்வேலி வந்து சேர்ந்தனர்.


17.06.1911 அன்று ஆஷ் தனது மனைவியுடன் கொடைக்கானல் செல்லவிருப்பதை அறிந்தனர். திட்டப்படி வாஞ்சி திட்டத்தை கச்சிதமாக முடிக்க வேண்டும். ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அந்தச் சமயத்தில் சாவடி அருணாசலம் பிள்ளை அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 


வாஞ்சியும், சாவடி அருணாசலம் பிள்ளை அவர்களும் ஆஷ் பயணித்த அதே ரயிலில் பயணித்தனர். மணியாச்சி ரயில் நிலையத்தில் திட்டமிட்டப்படி வாஞ்சி கச்சிதமாக ஆஷினை தனது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, சிறிது தூரம் ரயில்வே பிளாட்பாரத்தில் ஓடி கழிவறைக்குள் புகுந்து தன்னையும் மாய்த்துக் கொண்டார். 


ஆஷ் கதை முடிந்துவிட்டது என்பதை அறிந்த சாவடி அருணாசலம பிள்ளை யார் கண்ணிலும் படாமல் ரயில்வே பாதையைத் தாண்டி ஓடி மாயமாய் மறைந்து விடுகிறார். வாஞ்சியின் சட்டைப் பையில் இருந்த சில தகவல்கள் கொண்டே செங்கோட்டை முழுவதும் முழு காண்காணிப்புக்கு ஆளானது. அதில் சாவடி அருணாசலம்பிள்ளை கல்கத்தா நேஷனல் மருத்துவ கல்லூரி சம்பந்தப்பட்ட ஆவணக் குறிப்பேட்டைக் கண்டறிந்து டி.ஐ.ஜி. தாமஸ் தலைமையில் ஒரு சிறப்புப்படை கல்கத்தா நோக்கி பயணமாகியது.


தர்ப்பை புல்லைஏந்தும் ஏழைப்பிராமணன் வாஞ்சி ஆஷின் கதையை முடித்ததை அறிந்த பிரிட்டீஷ் போலீஸ் பட்டாளம் கலகலத்து விட்டது. லண்டன் பாராளுமன்றம் வெலவெலத்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொடிய அடக்குமுறை. கொலை நடந்த ஒரு வாரத்துக்குள் சாவடி அருணாசலம் பிள்ளை கல்கத்தாவில் கைது செய்யப்படுகிறார்.


கைது செய்யப்பட்ட சாவடி அருணாசலம் பிளையை கொடூரமான மிருகங்களை சங்கிலி போட்டுக் கட்டி இழுத்து வருவது போல கையிலும், காலிலும் சங்கிலியால் கட்டி ரயில் இருக்கையில் கால்களோடு இணைத்து சென்னை நோக்கி கொண்டு வரப்பெற்றார். முன்னரே கைது செய்யப்பட்ட 13 இளைஞர்களோடு சேர்த்து இவரையும் சென்னை சிறையில் அடைத்து வைத்தனர். 


மொத்தம் 14 குற்ற்வாளிகள் பட்டியலில் சாவடி அருணாசலம் பிள்ளை 11 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். 1911 ம் ஆண்டு செப்டெம்பர் 11ம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு ஆரம்பமாகியது. இந்த விசாரணை 1912 பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.


சென்னை சிறையில் குற்றவாளிகள் 14 பேரையும் நிறுத்தி அடையாளம் காட்டச் சொல்ல அப்போது 11வது குற்றவாளீயாக சாவடி அருணாசலத்தை திருநெல்வேலி பேராசிரியர் ஞானமுத்து அடையாளம் காட்டுகிறார். (ஆஷ் கொலை வழக்கு தீர்ப்பு நகல்- பகுதி-4, பக்க, 1393,1394)


அதே போன்று ஏ.எம்.சி. தாம்போ தலைமை விசாரணையில் போலீஸ் தரப்பில் அளிக்கப்பட்ட சாடசியத்தின் வழியே 


‘’திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு சம்பந்தமாக செங்கோட்டைக்குச் சென்ற போது அவர் வீட்டில் காணப்படவில்லை. அவருடைய வீட்டில் அகப்பட்ட ஆவணங்களின்படி கல்கத்தா மெடிக்கல் காலேஜில் சேர வந்துள்ள பிராஸ்பெக்டஸை ஆதாரமாகக் கொண்டு சென்னை போலீசார் கல்கத்தாவுக்குச் சென்று அங்குள்ள போலீசாருடன் ரகசிய தொடர்பு கொண்டு ஆய்வாளர் ராபர்ட்ஸ் என்பவருடன் கூலத்தோவில் மெடிக்கல் காலேஜ் மாணவர் விடுதியின் அறையை சோதனையிட்டதில் ஒரு பெரிய பீரோவிற்கு பின்புறம் ஒளிந்திருந்த சாவடி அருணாசலம் பிள்ளையை கைது செய்து திருநெல்வேலியில் நடக்கும் சட்டப்பூர்வாங்க விசாரணைக்கு உட்படுத்தி, அவரை ஆஜர்படுத்தினோம் எனக் கூறப்பட்டது’”. 


அதன் பின்னர் இறுதி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.


இந்த வழக்கு விசாரணை ஒன்றரை ஆண்டுகள் நடைபெற்றது. இந்தக் காலக் கட்டத்தில் சாவடி அருணாசலம் பிள்ளை அனுபவித்த துன்பம் இருக்கிறதே அதை அனுபவித்தால்தான் அதன் கொடூரத்தை உணர முடியும்.


பச்சை மாமிசத்தை மலம் கொட்டும் சட்டியில் கொடுத்துச் சாப்பிடச் சொன்னது கூட அவரை வருத்தவில்லை. 


ஆனால் வெள்ளையர்கள் ‘’இந்தக் கைதானே ரத்தக் கையெழுத்து போட்டது?” எனச் சொல்லி சொல்லி ரூல்தடியால் அவரது கைவிரல்களின் எலும்புகளை ஒடித்ததை நினைத்து தனது வாழ்நாள் முழுவதும் எண்ணி வருந்தினார். 


நல்ல எழுத்தாளரான இவர் இந்த கைகளால் எழுத முடியவில்லை என்றபோது முழு வேதனை அடைந்தார்.


இந்த வழக்குகளுக்காக தன்னிடமுள்ள சொத்துக்கள் எல்லாவற்றையும் இழந்தார். 


ஒருவழியாக ஆந்திர கேசரி பிரகாசம், ராமானுஜாச்சாரி போன்ற சட்டநிபுணர்களின் வாதத்திறமையால் வழக்கில் இருந்து விடுதலை ஆனார்.


லட்சாதிபதியாக பிறந்து செல்வாக்காக வாழவேண்டிய அருணாசலம் பிள்ளை அவர்கள் சிறை தந்த நோயோடும், சொத்தை இழந்த கவலையோடும், தேற்ற வேண்டிய உறவினர்கள் இவரை சமூக புறக்கணிப்பு செய்தமையும், போலீசாரின் தொடர் கண்காணிப்பும் இவரை மன அளவில் முடக்கிப்போட்டது.


வாழ்க்கை முழுமையும் சூன்யமாக்கப்பட் சூழழில் சமூக சேவை செய்யலாம் என்றெண்ணி முழுக்க முழுக்க பட்டியல் சாதியினரைக் கொண்டு ஒரு உணவு விடுதி தொடங்கி இந்த விடுதிக்கு சாப்பிட வரும் உயர் சாதியினருக்கு இலவமாகச் சாப்பாடு போடுவதோடு வந்து சாப்பிடுபவர்களது துணிச்சலைப் பாராட்டி வெகுமதியும் கொடுத்துள்ளார். 


இந்தச் செய்கையினால் தீண்டாமையை ஒழித்து விடலாம் என்று எண்ணினார். ஆனால் பிற சாதிக்காரர்களின் வெறுப்புக்கு ஆளாகி அவர் நடத்திய உணவு விடுதியையும் தீக்கரையாக்கி விட்டார்கள். அதே போன்று பட்டியல் சாதி திருமணங்களை தானே முன்னின்று நடத்துவதிலும் தயங்க மாட்டார் சாவடி அருணாசலம் பிள்ளை.


நண்பர்களை பார்த்து பேச முடியவில்லை. இயல்பாக நினைத்த கருத்துக்களை எழுத கூட முடியாத அளவுக்கு கைவிரல் எலும்புகளும் முற்றிலும் ஒடிக்கப்பட்ட நிலையில் என்னதான் செய்ய முடியும். 


இறுதிக் காலத்தில் தனக்குரிய தமிழறிவை பயன்படுத்தி வறுமையைப் போக்க திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் பிரபல மருத்துவராக ஜொலிக்க வேண்டியவர் தந்து மருத்துவப் படிப்பினையும் தொடர முடியாமல், தமிழாசிரியராக பணிபுரிந்து இதே நாளில் 27.04.1937ம் ஆண்டு தமது 45 ம் வயதில் மறைந்தார்.


வீரவாஞ்சிக்கு உறுதுணையாக இருந்த சாவடி அருணாசலம் பிள்ளை மனைவி தங்கம்மாள் 20.06.1967ல் தியாகி பென்சனுக்கு விண்ணப்பித்த நிலையில் அவருக்கு பென்சனுக்கு தகுதி இல்லை என்று அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர்.  


எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்தில் மீண்டும் பென்சனுக்கு முயற்சித்த வேளையில் எம்.ஜி.ஆர். பரிவுடன் மனுவை பரிசீலித்து 1980ம் ஆண்டில் பென்சன் வழங்க உத்தரவிட்ட நிலையில் சில மாதங்களில் பென்சன் பெற்று மனைவியும் இறந்து விட்டார்.


சித்திரைக் கூட்டம் நடந்த அந்த ரகசிய அறையில் என் காலடி பட்டதும் பெரியவர் வ.உ.சி.க்காக எத்தனை எத்தனை இளைஞர்கள் தனது செல்வாக்கு மிக்க வாழ்க்கையைத் தொலைக்க முன்வந்துள்ளனர். 


பெரியவர் வ.உ.சி. தனது வாழ்க்கையை மட்டும் முற்றிலும் அழித்துக்கொண்டாலும் அவருக்காக சிவா, மாடசாமி, ஆர்யா, கிருஷ்ணசாமி சர்மா போன்ற பல கணக்கில்லா இளைஞர்கள் பெரியவர் வ.உ.சி. எழுப்பிய தியாக வேள்வித் தீயில் அழித்துக் கொண்ட இளைஞர்கள் வரலாற்றை மீட்டெடுத்து ஆவணப்படுத்துவது  இளைய சமுதாயத்தினருக்கு நாம் கடத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஏனெனில் இவர்கள் பொது வரலாற்று ஆவணங்களில் தேடினால் அகப்பட மாட்டார்கள்.


வரகவி சுப்பிரமணிய பாரதி ஒரு தடவை பச்சையப்ப கல்லூரி பேராசிரியர் திருமணம் செல்வகேசராய முதலியார் அவர்களைச் சந்தித்த வேளையில் வ.உ.சி. பெயர் அடிபடுகிறது. அச்சமயம் பாரதியிடம் முதலியார் வருத்தம் தோய்ந்த குரலுடன் பின்வருமாறு கூறுகிறார்.

’’ பரிசுத்த்தமான சர்வபரித் தியாகி வ.உ.சி. என்ற தேசபக்தரை பரிதவிக்கவிட்ட இந்த நாடு உருப்படாது என்று சாபமிட்டாராம். 


வ.உ.சி. போன்ற ஆளுமைக்கே வரலாற்றில் இடம் இல்லாத இந்த நாட்டில் மாடசாமி, அருணாசலம் போன்றோரை எவ்வாறு நினைவில் கொள்வார்கள் என்று நாம் நினைப்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

ரங்கையா முருகன் in FB

Friday, April 11, 2025

பாரதி கண்ணம்மாவின் இறுதி நொடிகள்..

 மகாகவி பாரதியின் பேத்தி யான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவரது கட்டுரை இது.


உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது. எனக்குத் தெரியும். என் பெயர் விஜயா. பாரதியின் மூத்த பெண் தங்கம்மாவின் மகள் நான். என் பாட்டி கடையத்தில் வாழ்ந்த போது அவருடன் என் இளமைக் காலத்தைக் கழித்தேன். நான் திருநெல்வேலியில் கல்லூரியில் படித்த போது, என் பாட்டி வாழ்ந்த கடையத்தில்தான் என் விடுமுறைகளைக் கொண்டாடினேன். பாரதியின் மரணத்தின் போது என் பாட்டிக்கு முப்பதே வயது. இளம் விதவை. கல்வி கற்காத பெண். இரண்டு பெண்கள். அதில் ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை. சொத்து என்று இருந்ததெல்லாம் அவள் கணவரின் எழுத்துக்கள் மட்டுமே. கொஞ்சம் அவள் நிலையை எண்ணிப் பாருங்கள். அந்தக் காலத்தில், விதவைப் பெண்களின் வாழ்வு, அவள் உறவினர்களைச் சார்ந்தே இருந்தது. அதுவும் இரண்டு பெண்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு வேறு. என் பாட்டிக்கு, பாரதிதான் தெய்வம். அவர் மறைவுக்குப் பின், அவர் விரும்பிய புதுமைப் பெண்ணாகவே நடந்தாள் என் பாட்டி. தன்னிடம் இருந்த சில மூட நம்பிக்கைகளையும், மனக் கலக்கங்களையும், தேவையில்லாத பழம் வழக்கங்களையும் விட்டு ஒழித்தாள். எதையும் சமாளிக்கும் மன தைரியமும், தீவிர கடவுள் பக்தியும்,  நல்ல காலம் பிறந்தே தீரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும், விடா முயற்சியும் கொண்டு வாழ்ந்தாள். தன் பெண்கள் மற்றும் பேரக் குழந்தைகளின் கல்வி மட்டுமே அவளின் ஒரே குறிக்கோள். எப்படியாவது நாங்கள் அனைவரும் – முக்கியமாக பேத்திகள் – படித்து விட வேண்டும் என்று பாடுபட்டாள். நான் டாக்டர் பட்டம் வரை பெற்றதற்கு அவள்தான் ஓரே காரணம். தன் கணவன் பாரதியின் நினைவுகளே அவளின் சக்தி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரின் பாடல்களைப் பாடிக் கொண்டும், எங்களையும் பாட வைத்துக் கேட்டுக் கொண்டும் இருப்பாள். பாரதியும் எல்லாப் பாடல்களும் அவளுக்கு மனப்பாடம் என்று என் அம்மா சொல்லக் கேட்டு இருக்கிறேன். வறுமை என்பதை உணர விடாமலேயே என்னை வளர்த்தாள். நான் கல்லூரியில் இருந்து வரும் போதெல்லாம், என்னை வாசலில் இருந்தே கட்டி அணைத்து “வாடாக் குழந்தே.. கை கால் அலம்பிட்டு வா. சாப்பிடலாம்” என்று ஊட்டி விட்டுக் கொண்டே நான் என்னவெல்லாம் படிக்கிறேன் என்று ஆர்வமாய் கேட்பாள். 1955 ஆம் வருடம். அவளுடன் என் கடைசி விடுமுறை. “வந்துட்டியாம்மா! உனக்காகத்தான் காத்துண்டு இருக்கேன்” என்று என்னை படுக்கையில் இருந்தபடியே வரச் சொல்லி கட்டி அணைத்துக் கொண்டாள். அவளுக்கு உடல் நலம் சரியில்லை என்பதை எனக்கு எழுத வேண்டாம் என்று சொல்லி விட்டாள். “லீவு விட்டதும் வந்தா போதும்”. அதற்குப் பிறகு, கோமாவில் விழுந்து விட்டாள். ஒரு அசைவும் இல்லை. உணவு செல்லவில்லை. டாக்டர் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று கை விரித்து விட்டார். எல்லோரையும் வரச் சொல்லி விட்டோம். பெண்கள், பேரன் பேத்திகள், உறவினர்கள் என்று வீடு முழுவதும் கூட்டம். நான் அவளின் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். ஒரு முறையாவது கண் திறக்க மாட்டாளா என்ற ஏக்கம். கண் திறக்கவில்லை. விழி கூட அசையவில்லை. பின்னிரவு நேரம். வீடே அமைதியில் உறைந்து இருந்தது. இறுதி நிமிடங்கள் என்று எல்லோருக்கும் தோன்றி இருக்க வேண்டும். நீர் நிறைந்த கண்கள் எதுவும் உறங்கவில்லை. அவள் உதடுகள் மட்டுமே விரிந்தன. “திண்ணை வாயில் பெருக்க வந்தேன். எனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்” என்று மெல்லிய குரலில் பாட்டி பாடினாள். நிறுத்தி விட்டாள். என் மனதுக்குள் அடுத்த வரிகள் எழுந்தன. ஏங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டேன். நித்தச் சோற்றினுக்கே ஏவல் செய வந்தேன்;நிகரிலாப் பெருஞ் செல்வம் உதவினான்.வித்தை நன்கு கல்லாதவள் என்னுளேவேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்.அதே இரண்டு வரிகளை இன்னும் ஒரு முறை பாடினாள். “திண்ணை வாயில் பெருக்க வந்தேன் எனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்”சில நொடிகள் மௌனம். மீண்டும் அவள் குரல். இன்னும் மெல்லியதாய். உடல் எழுப்பும் குரலாய் இல்லாமல், அதை விட்டு விலகிச் செல்லும் அவள் ஆத்மாவின் குரலாய்.. “திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்.  திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்”அவள் மூச்சு நின்று விட்டது. அவள் அரசன் பாரதி சென்ற நாராயணனின் திருவடிகளுக்கே பாரதியின் செல்லம்மாவும் சென்று விட்டாள்.என் பாட்டி செல்லம்மாள் பெரும் பாக்கியவதி. புகைப்படத்தில் மகள் மீரா டி.சுந்தரராஜன் உடன் விஜயா பாரதி.

https://www.facebook.com/share/16Ei89hhX5/

Monday, March 24, 2025

All LPG consumers pl.note

 *All LPG consumers should pay attention to this post:*


(This post is based on a woman's own experience...)


Last Sunday I got a useful information. I had to change my gas cylinder, I removed the empty cylinder and installed a new filled cylinder.


As soon as I turned on the knob, I felt the smell of gas leaking. For safety reasons I turned off the knob. I immediately informed my gas agency and asked for help. He replied that the agency is closed as it is Sunday, now our man will be able to solve your problem only tomorrow, sorry.


I sat down in despair, suddenly I thought that I should search on Google, maybe I will find some emergency number.


Google showed a number *1906* - in case of gas leakage.

 

When I called that number, *Gas Leakage Emergency* appeared on True Caller. A lady picked up the phone, I told her my problem, she replied that the service man will reach your address within 1 hour. If gas pipe is leaking, then you will have to pay the charge for the new pipe, otherwise you will not have to pay anything,

  

I was surprised when within half an hour a boy knocked at the door *That boy checked, and within 1 minute changed the washer inside the cylinder and turned on the gas.* When I tried to give him some money, he politely refused to take it.*He said that this facility has been provided to him free of cost by the Central Govt.*


Within half an hour the lady who received the call called and asked whether my problem was resolved or not?


I checked the facts again on Google and saw that this facility is available 24×7 on web: *services.india.gov.in* which is related to all gas companies/complaints.


*I request you all to share this message with all your acquaintances and groups so that it is useful for everyone at the time of emergency*


*Senior citizen help line phone no. 14567*


*Gas Leakage Emergency 1906*

Sunday, March 23, 2025

வீட்டில் மின் பாதுகாப்பு..

 வீட்டில் மின் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி கொஞ்சம பார்ப்போம்...


i) எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம், செலவு பாராமல் வைக்க வேண்டும்.


ii) வீட்டிலுள்ள வீணாய் போயுள்ள, பழைய சுவிட்சுகளை அவசியம் மாற்றிவிட வேண்டும். தரமான சுவிட்ச்களை வாங்கிப் பொருத்த வேண்டும்.


iii) தண்ணீர் ஏற்ற வைத்துள்ள மோட்டர் சுவிட்ச் போர்ட், வாஷிங் மிஷின், ஃபிரிட்ஜ் கீழே ரப்பர் மேட் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.


iv) எந்த சுவிட்சை இயக்கும் போதும் இடது கையை பின்புறத்தில் கட்டிக் கொண்டு, வலது கை சுட்டு விரலால் மட்டுமே இயக்க வேண்டும், இதயம் இடது புறத்தில் உள்ளதால்.


v)பாத்ரூம் சுவிட்ச் போர்டின் மேல் ஒரு பழைய டூத் பிரஷ் வைத்துக் கொண்டு, அதனால் சுவிட்சைப் போடுவதே பாதுகாப்பானது.


vi) மழைக் காலம் வாட்டர் ஹீட்டர் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருப்பதால், அதன் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மும்பையில், ஒரு நடிகை ஹீட்டர் நீரில் குளிக்கும் போது, மின் ஷாக் அடித்து இறந்து போனது அறிந்திருப்போம். தண்ணீர் இல்லாததால், ஹீட்டர் எலிமெண்ட் உருகி, மின்சாரம் பாய்ந்து அந்த நடிகை  இறந்து  போயிருக்கிறார்.

ஹீட்டருக்கு கொடுக்க கூடிய இன்லெட்,  அவுட்லெட் ஏதும் மாறவே கூடாது. எதிலும் கண்ட்ரோல் வால்வ் வைத்துவிடக் கூடாது.

அவுட்லெட் , ஹாட் வாட்டர் டேப் வழியாக தண்ணீர் வருவதை உறுதி செய்து கொண்ட பின்னரே,

ஹீட்டர் சுவிட்சை ஆன் பண்ண வேண்டும். ELCB இம்மாதிரி சமயங்களில் நம்மைக் காப்பாற்றும். ஹீட்டர் சுவிட்சை டவல்/துடைக்கும் துண்டை வைத்து ஆஃப் செய்தால் ஈரக்கையோடு சுவிட்சை தொடுவதிலிருந்து தப்பித்து விடலாம்.


vii) பொதுவாக வாட்டர் ஹீட்டருக்கு சாதாரண சுவிட்ச் தான் வைத்திருப்பார்கள். அதற்குப் பதிலாக எம்சிபி வைத்தால், ஹீட்டரில் ஏதாவது ஷார்ட் சர்க்யூட் ஆகும் போது ட்ரிப் ஆகி நம்மை காக்கும். எப்போதும், சுடு நீர் தயார் பண்ணிவிட்டு, MCB ஐ ட்ரிப் பண்ணிவிட்டு குளிக்கப்போவதே நல்லது. இதே போல,வெட் கிரைண்டருக்கும் எம்சிபி பொருத்திக்கொள்வதே நல்லது.


viii) ஈர மின் சாதனங்களான வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்றவற்றைக் கையாளும் போது, சுவிட்ச்சை ஆஃப் பண்ணாமல் ஈரத் துணிகளை எடுப்பதோ, மாவை அள்ளுவதோ கூடவே கூடாது.


ix) இவ்வளவு கவனமாக இருந்தும்,

ஆக்சிடெண்டலாக ஷாக் அடிக்க நேர்ந்தால், நேர்ந்து விட்டால்,

அருகிலுள்ளவர் ஒரு கம்பால் அல்லது துடைப்பக் கட்டையால்

பாதிக்கப் பட்டவரின் கையை அடிக்க வேண்டுமே அன்றி, பாதிக்கப்பட்டவரை  நேரடியாக தொடவே கூடாது.


கிரைண்டரில் ஷாக் அடித்த மருமகளையும், பேத்தியையும் காப்பாற்ற அவர்களை தொட்டு இழுத்து , இறந்து போன மாமியாரையும், பல வருடங்களுக்கு முன்பு, திருநெல்வேலி அருகே, இன்சுலேஷன் பாதிப்படைந்த சர்வீஸ் லைன் மேல் பட்டு கீழே வீழ்ந்து கிடந்த டிவி  ஆண்டெனாவைத் தொட்ட ஒரு மனைவியைக் காப்பாற்றப் போன கணவன் தொடர்ந்து தொட்ட மகன், மகள், உறவினர்களென்று கிட்டத்தட்ட ஏழு பேர் ஒரே நேரத்தில் இறந்து போனதையும் மறக்கவே கூடாது. இம்மாதிரியான நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல், அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும். செருப்பு இதற்கு நல்ல ஸேஃப்டி டூல். அதனால், அடித்துக் கூட காப்பாற்றலாம்.


வீடென்றால் தொடப்பக்கட்டை.. வெளியே என்றால் செருப்பு..


எளிதாகக் கிடைக்கும் என்பதற்காகத் தான், வேறொன்றுமில்லை

(ஷாக் அடித்தால் தான்.. சும்மா இருக்கும் போது அடித்து வம்பிழுக்க வேண்டாம்). தண்ணீரில் வீழ்ந்தவரைக் காப்பாற்றப் போய் தானும் உயிர் விடற மாதிரி ஆகிவிடக் கூடாதல்லவா?


x) கைக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு மின்சாதனங்களைத் தொடவே கூடாது. குழந்தைகளுக்கு எட்டும்படியாக சுவிட்ச் பாக்ஸ் வைக்கக் கூடாது.


xi) சிங்கிள் பேஸ் சப்ளை வைத்திருப்போர், இரு முனை அயன்கிளாட் சுவிச்சும், 3 பேஸ் சப்ளை வைத்திருப்பவர்கள் 4 முனை சுவிட்ச்சும் வைத்திருக்க வேண்டும்.

நியூட்ரலில் லின்க் போட்டிருக்க வேண்டும்; ஃப்யூஸ் போடக் கூடாது.

நியூட்ரல் கிரவுண்டிங்கை சரியாகப் பராமரிக்க வேண்டும்.


xii) நமது வீட்டில் பொருத்தியுள்ள UPSக்கு மின்வாரிய நியூட்ரலைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றோம்.  மின்சாரம் இல்லாத போது நமது UPS மூலம்  நமது மின் சாதனங்கள் இயங்கும்போது, அவையேதும் ஃபால்ட்டானால், நியூட்ரல்/ எர்த் வழியாக மின்கம்பத்திற்கு மின்சாரம் வந்து சில மின் ஊழியர்கள் இறந்துள்ளனர். ஆகவே நாம் UPS ல் உள்ள நியூட்ரலை  பயன்படுத்திக் கொண்டால்   மின்கம்பத்திற்கு மின்சாரம் வராமல் அல்லது மின்சாரம் இல்லாத போது மெயின் சுவிட்சை ஆஃப்  செய்து வைத்து மின்வாரியத்திற்கு உதவி உயிர் பலியினை தடுப்பது நமது கடமை.


UPS சப்ளைக்கு காமன் நியூட்ரலை பயன்படுத்துவது தான் பொதுவாகப் புழக்கத்தில் இருக்கிறது. UPS சப்ளைக்கு தனி நியூட்ரலை பயன்படுத்த வேண்டுமாயின், UPS ஃபீடிங் சர்கூட்டின் நியூட்ரலையும், 

பேஸ் மாதிரியே தனியாகப் பிரித்து, UPS இன் பேஸ், நியூட்ரலுக்குமாகத் தனியாக ஒரு காண்டேக்டர் மூலமாக UPS சர்கூட்டின் சப்ளையை பராமரிப்போமானால், சர்கூட்டின் ஃபேனோ, லைட்டோ பழுதடைந்தால், UPSஇன் பேஸ், வாரியத்தின் நியூட்ரலுக்கு ரிட்டர்ன் சப்ளை போகாது. இது எளிதான காரியமல்ல.

அதற்குப்பதில், RCCB இணைத்தோமானால், யுபிஎஸ் சப்ளை, வாரியத்தின் லைனுக்கு பேக் ஃபீடாகி விபத்து நேர்வதை தடுக்கலாம். இதை கொஞ்சம் மெனக்கெட்டு செய்யனும்.


xiii)முதலில் சொன்னதையே இறுதியிலும் சொல்கிறேன், ELCB ஐ அவசியம் வாங்கிப் பொருத்துங்கள்.


வீட்டின் அனைத்துச் சுவர்களும் ஓதம் காக்கும். குறிப்பாக, மெயின் சுவிட்ச் போர்ட் இருக்குமிடம் சொதசொதன்னு இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஈரம் மின்சாரத்திற்கு நண்பன்.. எனவே, நாம்தான், இந்த கடும்  மழைக் காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.



Tuesday, March 18, 2025

கனவு நிஜமாகுமா..?

 யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காததால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டுக்கு வந்த ஜனாதிபதி அதிரடியாக சில  முடிவுகள் எடுத்தார். 

அதில் ஒன்று, அரசு பெயரில் இருக்கும் மொத்த கடனையும் கணக்கிட்டு, அதை பொதுமக்கள் எல்லோருக்கும் சமமாகப் பிரித்தார்.

ஒவ்வொருவருக்கும்  ஒரு குறிப்பிட்ட தொகை வந்தது.

அதை அரசுக்கு மக்கள்தான் கட்டவேண்டும் என்றதும் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

உங்களை ஆண்ட முந்தைய ஆட்சியாளர்கள், உங்களுக்கு கொடுத்த இலவசங்களாலும் மானியங்களாலும்,  பணம், பிரியாணி மற்றும் சரக்கு போன்ற செலவுகளால்தான்  இந்த கடன்  வந்தது.

இலவசங்களையும்  பணத்தையும் பிரியாணியையும் கை நீட்டி வாங்கி விட்டு  அவர்களுக்கு  ஓட்டு போட்டு  தேர்ந்தெடுத்தது உங்கள் தவறு, நீங்கள் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும்.

அதனால் உங்களால் வாங்கப்பட்ட கடனை நீங்கள்தான் அடைக்க வேண்டும்.

மீறினால், உங்கள் கடன் தொகைக்கு ஏற்ப, உங்கள் வீட்டில் உள்ள பொருட்களோ உங்கள் சொத்துக்களோ ஜப்தி செய்யப்படும் என்றார்.

மக்களும் வேறு வழியின்றி கட்டத் தொடங்கினர்.

கட்ட மறுத்தவர்களின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டன.

சில மாதங்களில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டு, மீண்டும் தேர்தல்  அறிவிக்கப்பட்டது.

இந்த முறையும் ஒவ்வொரு கட்சியும் இலவச தூண்டில் போட்டு தேர்தல் அறிக்கை தயாரித்து வினியோகித்தது.

இம்முறை மக்கள் எல்லோரும் விழிப்புணர்வு பெற்று, 

எங்கள் வாழ்வாதாரத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழி செய்யாமல்,

எங்களை,

தன்மானம், சுயமரியாதை என்பதையே உணரவிடாமல் கையேந்த வைத்துக் கொண்டு இருக்க வருகிறாயே என,

செருப்பாலும் விளக்குமாறாலும் அடித்து விரட்டி,

பணம், பிரியாணி, இலவசப்  பொருட்கள் கொடுக்காத,

மக்களுக்கு சேவை செய்வோம் என அறிக்கை கொடுத்த,

கட்சிக்கு ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்து, ஆட்சி செய்ய வைத்தார்கள்.


இப்படி ஒரு கனவு, நேற்றிரவு.

பதறியபடி எழுந்தேன்.

விடிந்ததா என பார்த்தேன்.

இருளாகவே இருந்தது.

விடியவே இல்லை.

எப்போதுதான் அந்த விடியல் வருமோ‌ என எண்ணியபடி மீண்டும் தூங்கத் துவங்கினேன்..

Monday, March 10, 2025

சிம்பொனி என்றால் என்ன..?

🎵 ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி எளிமையாக சொல்லவேண்டும் என்றால் சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா (Orchestra) அவ்வளவுதான். 


🎵 உலகில் பல வகையான ஆர்கஸ்ட்ரா இருக்கிறது. அதில் முக்கியமானவை:


1. சேம்பர் ஆர்கஸ்ட்ரா (Chamber Orchestra)

2. சிம்பொனி ஆர்கஸ்ட்ரா (Symphony Orchestra).


🎵 16ம் நூற்றாண்டு வரை இசையும் பாடலும் ஒன்றாக கலந்தே இருந்தது. இசையை மட்டும் தனியாக கேட்க முடியவில்லை. அதனால் இசையின் ஆழத்தை அறிந்து கொள்வதற்காக பாடல் இல்லாமல் இசையை மட்டும் கேட்பதற்காக உருவாக்கப்பட்டது.


🎵 அது தான் சிம்பொனி! இதற்கு சரியான வடிவத்தைக் கொண்டுவந்து இதை புகழ் பெற வைத்தவர் Father of Symphony என்று அழைக்கப்படுகிற ஜோசப் ஹைடன் (1732-1809). மொசாட் மற்றும் பீத்தோவன் இருவருக்கும் இவர்தான் குருநாதர்.


🎶 மீண்டும் சிம்பொனிக்கு வருவோம்.


🎵 ஒரு இசை வடிவம் எப்பொழுது சிம்பொனி என்று அழைக்கப்படுகிறது? ஒரு சிம்பொனி எவ்வளவு நேரம் இசைக்கப்பட வேண்டும்? எத்தனை இசைக் கருவிகள் பயன்படுத்த வேண்டும்? எவ்வளவு இசைக் கலைஞர்கள் பங்குபெற வேண்டும்?


🎵 ஒரு சிம்பொனி குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள் இருக்க வேண்டும். 18 முதல் 24 வகையான இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும். 80 முதல் 120 இசைக் கலைஞர்கள் வரை ஒரு அரங்கத்தில் இதை இசைக்க வேண்டும். 


🎵 இந்த எண்ணிக்கையில் ஒன்று குறைந்தால் கூட அது சிம்பொனி ஆர்கஸ்ட்ரா என்று அழைக்கப்படாது. மாறாக அது சேம்பர் ஆர்கஸ்ட்ரா என்றுதான் அழைக்கப்படும்.


🎶 ஏன் இதற்கு இவ்வளவு கட்டுபாடுகள்? 


🎵 இதற்கு சிம்பொனி எப்படி உருவாகிறது என்பதை தெரிந்து கொண்டால் இதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.


சிம்பொனி நான்கு பகுதிகளாக இசைக்கப்பட வேண்டும் என்பதை முதலில் பார்த்தோம். இப்போது அந்த நான்கு பகுதிகள் எவை? அது எப்படி இருக்க வேண்டும்?


🎵 இதை விளக்குவதற்கு இங்கிலாந்து இளவரசியின் திருமணத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். 


🎵 1. The Fast Movement: 🎶


🎵 காலையில் திருமண நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. இது துவக்க நிலை உறவினர்கள், நண்பர்கள், விஐபிகள் போன்றவர்கள் அங்கு வருகை தர ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் கோலாகலமாக இருக்கும். இதை குறிப்பதற்கு இசை துள்ளலாக, கொஞ்சம் அதிரடியாக இருக்க வேண்டும்.


🎵 2. The Slow Movement: 🎶


🎵 இப்போது அரண்மனைக்குள் அனைவரும் செட்டில் ஆகியிருப்பார்கள். மணமகன், மணமகள் அங்கு தோன்றுவார்கள்.‌ இப்போது துவக்க நிலை இசையை நன்றாக விரிவுபடுத்தி இசையின் ஆழத்திற்கு செல்ல வேண்டும். இந்த பகுதி அமைதியானதாக இருக்க வேண்டும். மெலடி டியூன்ஸ் இங்கு அதிகம் வாசிக்கப்படும்.


🎵 3. The Dance Number: 🎶


🎵 திருமணம் முடிந்து கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கிறது. இப்போது அந்த இடம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். இதை குறிக்கும் வகையில் இசை என்பது நடனம் ஆடுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். 


🎵 4. An Impressive Fast Movement: 🎶


🎵 இப்போது அரண்மனைக்குள் தீ பிடித்து விடுகிறது. அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓட ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் பதட்டமாக இருக்கும். இதுதான் சிம்பொனியின் உச்சகட்டம். இங்கு இசையில் நிறைய பரிசோதனைகள் செய்து பார்க்கப்படும். இங்கு இசையமைப்பாளர் தன் முழு திறமையையும் காண்பித்து சிம்பொனியை நிறைவு செய்வார்.


🎵 இந்த நான்கு பகுதிகளையும் உருவாக்குவதற்கு தான் இருபது நிமிடங்களுக்கு மேல் இசை தேவைப்படுகிறது. இதற்குத்தான் எண்பதுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள்.


🎵 மிக முக்கியமாக, சிம்பொனி இசையை ஸ்டுடியோவுக்கு உள்ளே உருவாக்கி பின்னர் அதை வெளியிடக் கூடாது. ஒரு பெரிய அரங்கத்தில் 80க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களோடு, ஒவ்வொரு இசையையும் இருபது நிமிடங்களுக்கு மேல் பார்வையாளர்களுக்கு முன்னிலையில் இசைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது சிம்பொனியாகக் கருதப்படும்....)